பெரியார் பிறந்த செப்டம்பர் 17-ந் தேதி சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

பெரியார் பிறந்த செப்டம்பர் 17-ந் தேதி சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு பெரியார் பிறந்தநாள் சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என்றுசட்டசபையில் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். 

 முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டசபையில் பேரவை விதி எண் 110-ன் கீழ் அறிவிப்பை வெளியிட்டு பேசியதாவது:- பெரியார் “ஈ.வெ.ராமசாமி என்கிற நான் திராவிட சமுதாயத்தைத் திருத்தி உலகில் உள்ள மற்ற சமுதாயத்தினரைப் போல் மானமும், அறிவும் உள்ள சமுதாயமாக ஆக்கும் தொண்டை மேற்போட்டுக்கொண்டு அதே பணியாய் இருப்பவன். இதைச் செய்ய எனக்கு யோக்கியதை இருக்கிறதோ இல்லையோ, இந்த நாட்டில் அந்த பணியைச்செய்ய யாரும் வராததினால், நான் அதை மேற்போட்டுக்கொண்டு தொண்டாற்றி வருகிறேன்” என்று அறிவித்துக்கொண்டு, 95 வயது வரை மூத்திரச் சட்டியைத் தூக்கிக்கொண்டு இந்த இனத்துக்காக, நாட்டுக்காக போராடியவர்தான் தந்தை பெரியார்.

 ‘மானமும், அறிவும் மனிதர்க்கு அழகு’ என்பதையே அடிப்படையாக கொண்டு சுயமரியாதை இயக்கம் தொடங்கிய தந்தை பெரியார் மானமும், அறிவும் உள்ள மனிதர்களாக ஆக்குவதற்கு அறிவுலக ஆசானாக இந்த நாட்டை வலம் வந்தார். அவர் நடத்திய போராட்டங்கள் யாராலும் ‘காப்பி' அடிக்க முடியாத போராட்டங்கள், அவர் எழுதிய எழுத்துகள் யாரும் எழுதத் தயங்கும் எழுத்துகள், அவர் பேசிய பேச்சுகள், யாரும் பேசப் பயப்படும் பேச்சுகள்; தமிழர் நலமெல்லாம் தன்னுடைய நலமாக கருதினார். 

தமிழர்க்கு எதிரானது எல்லாவற்றையும் தனது எதிரியாக கொண்டு எதிர்த்திருக்கிறார். அவர் நடந்த நடை, அவர் நடத்திய சுற்றுப்பயணங்கள், அவர் நடத்திய மாநாடுகள், அவர் நடத்திய போராட்டங்களைச் சொல்லத் தொடங்கினால், இந்த மாமன்றத்தையே பத்து நாட்களுக்கு ஒத்தி வைத்துப்பேச வேண்டும். வசந்த காலம் ‘என் வாழ்வில் வசந்த காலம் என்பது தந்தை பெரியாரோடு நான் இளைஞராக இருந்து வலம் வந்த காலம்தான்' என்று நம்மையெல்லாம் உருவாக்கிய பேரறிஞர் அண்ணா சொன்னார். “பாராட்டிப் போற்றி வந்த பழமை லோகம் ஈரோட்டுப் பூகம்பத்தால் இடியுது பார்” என்று எழுதினார் கருணாநிதி. இந்த குருகுலத்து பயிற்சிதான் தி.மு.க.வை உருவாக்கி, அரசியல் புரட்சிகரக் கருத்துகளைத் தமிழ்நாட்டில் விதைத்து, ஆட்சிக்கு வந்து அதே கொள்கையை நிறைவேற்றி வரும் அந்த காட்சியை நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள். 

இது உலகில் எந்த சீர்திருத்த இயக்கத்துக்கும் கிடைக்காத புகழாகும். தந்தை பெரியார் போட்ட விதை; பேரறிஞர் அண்ணா அதற்கு எருவூட்டினார், கருணாநிதி வளர்த்தார். அதனை மாபெரும் விருட்சமாக காப்பாற்ற வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. சமூக நீதிநாள் சுயமரியாதை, பகுத்தறிவு, சமதர்மம், சமூகநீதி, இன உரிமை ஆகியவற்றை அடிப்படையாக கொண்ட கொள்கையை பெரியார் உருவாக்கினார். அதுதான் கடந்த நூற்றாண்டில் இந்த சமூகத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்டது; எதிர்காலத்துக்கு பாதை அமைத்து தரப்போகிறது. இந்த உணர்வை, உணர்ச்சியை, எழுச்சியை, சிந்தனையை விதைக்கும் அடையாளமாக தந்தை பெரியார் பிறந்த செப்டம்பர் 17-ந் தேதி ஆண்டுதோறும் ‘சமூகநீதி நாள்' ஆக கொண்டாடுவது என்று தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளது. 

 தந்தை பெரியாரின் அறிவு வெளிச்சத்தில் வளர்ந்த நாம், நமது நன்றியின் அடையாளமாக இந்த நாளைக் கொண்டாடுவோம். சாதிய ஏற்றத்தாழ்வுகள், தீண்டாமைக் கொடுமைகளை, மத வேறுபாடுகளை உதறித்தள்ளுவோம். பெண்களைச் சமநிலையில் மதிப்போம். அந்த எண்ணத்தை விதைக்கும் விதமாக இந்த உறுதிமொழியைத் தயாரித்துள்ளோம். ஆண்டுதோறும் செப்டம்பர் 17-ந் தேதி தலைமைச் செயலகம் தொடங்கி, அனைத்து அரசு அலுவலகங்களிலும் கீழ்க்கண்ட உறுதிமொழியை அனைவரும் எடுத்துக்கொள்வோம். உறுதிமொழி “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அன்பு நெறியும், -யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பண்பு நெறியும் எனது வாழ்வியல் வழிமுறையாக கடைப்பிடிப்பேன். சுயமரியாதை ஆளுமைத் திறனும்-பகுத்தறிவுக் கூர்மைப் பார்வையும் கொண்டதாக என்னுடைய செயல்பாடுகள் அமையும் சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக என்னை நான் ஒப்படைத்துக் கொள்வேன். 

மானுடப் பற்றும் மனிதாபிமானமும் ஒன்றே எனது ரத்த ஓட்டமாக அமையும். சமூகநீதியையே அடித்தளமாக கொண்ட சமுதாயம் அமைக்கும் எனது பயணம் தொடர இந்த நாளில் உறுதியேற்கிறேன்” என்ற உறுதிமொழியை எடுத்துக்கொள்வோம் என்று இந்த மாமன்றத்துக்கு தெரிவித்துக்கொள்கிறேன். தந்தை பெரியார் மறைந்தபோது, ‘தந்தை பெரியார் தனது சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டார், நாம் தொடர்வோம்' என்றார் அன்றைய முதல்-அமைச்சர் கருணாநிதி. எனவே, நாம் தொடர்வோம், தொடர்வோம், தொடர்வோம். இவ்வாறு அவர் பேசினார்.

Comments

Popular posts from this blog